Friday 6 January 2012

ஆருத்ரா தரிசனம் 08.01.2012






Natrajar
 
 

              மிழ்மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ண னுக்கு ரோகிணி; முருகனுக்கு விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு 
பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார் கள். "பிறவா யாக்கைப் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி மூன்று புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.

ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.

அவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத்  திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி! நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள்! உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.

சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.

பெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, "சேந்தா! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.

அங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, "பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப்  பாடினார். உடனே தேர் நகர்ந்தது.

சேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.

சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்  ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின்  நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

திருமணமான பெண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஒன்று உண்டு. அதுதான் ஆருத்ரா தரிசனம்.

இதற்காக ஏற்கெனவே திருமணமானவர்கள், புதுமணத் தம்பதிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் வரவேண்டும். இங்குள்ள அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீரங்கம் அரங்கனையே மணப்பேன் என்று உறுதி கொண்டாள்; மணந்தாள். இதேபோல சிவபெருமானையே மணப்பேன் என்று அடம்பிடித்து அவரையே மணந்து கொண்டாள் அறம்வளர்த்த நாச்சியார்.

சுசீந்திரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேரூர் என்னும் சிறிய கிராமம். 550 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் பள்ளியறை நாச்சியார் என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். இவளது மகள்தான் அறம் வளர்த்த நாச்சியார். இவள் சிறுமியாக இருந்தபோதே சிவனை வழிபடுவதில் அதிக பற்றுடைய வளாக இருந்தாள்.

தினமும் சுசீந்திரம் வந்து சிவனை வழிபட்டு வந்தாள். இவள் பருவ மங்கை ஆனதும் அக்கால வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே  வரமுடியவில்லை. இவளுக்கோ சுசீந்திரம் சென்று சிவனை தரிசிக்க ஆசை. ஆனால் வீட்டாரின் 

அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சிவனையே நினைத்து நினைத்து, அவர் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது.

ஒருநாள் குறத்தி ஒருத்தி அவள் கையைப் பார்த்து, "நீ சிவனையே மணப்பாய்' என்று கூற, சிவன் மீதிருந்த காதல் மேலும் அதிகரித்தது.

சிவனை எண்ணி எண்ணியே சாப்பிடாமல், தூங்காமல் பித்து பிடித்தவள் போல் தன் அறையிலேயே சுற்றிச் சுற்றி வந்தாள் அறம்வளர்த்த நாச்சியார். இதைக் கண்ட அவளது தாய் பள்ளியறை நாச்சியார் அவளை ஒரு கூண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சுசீந்திரம் வந்தாள். வண்டியில் இருந்து இறங்கிய அறம்வளர்த்த நாச்சியார் சிவன் சந்நிதானத்தை நோக்கி ஓடினாள். 

அதே நேரத்தில் அசரீரி ஒன்று, "உன் மகளை சிவனுக்குத் திருமணம் செய்து வை' என்று கட்டளையிட்டது.

அதன்படி ஒரு மாசி மாத மக நட்சத்திர நாளில் நாச்சியார்- சிவன் திருமணம் சுசீந்திரம் கோவிலில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

எனவே, நினைத்தவரையே திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக வாழவிரும்பும் பெண்கள் சுசீந்திரம் கோவிலுக்கு  வந்து அறம்வளர்த்த நாச்சி யாரை வணங்குகிறார்கள்.

இதற்காக ஆருத்ரா தரிசனம் என்ற விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று அதி காலை நான்கு மணிக்கு சுசீந்திரம் கோவிலில் நடக்கிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்துகொள்கிறார்கள்.

ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண், பார்வதிதேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். பார்வதிதேவிக்கும் இவள்மீது அன்பு இருந்தது.

திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளி லேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து, ""பார்வதிதேவியே! உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா? உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்?'' என்று கூறிக்  கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு, அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.



 

உலகை இயக்கும் நடனம்

இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும்.

சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.

பதஞ்சலி முனிவருக்கு அருள்

பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார்.

உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார்.

அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள்



மரகத நடராஜர்

ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.
 
அஷ்ட சபைகளில் ஆடிய சுவாமி நெல்லையப்பர்
 
புராண வரலாற்றின் படி நம் தெய்வங்களாகிய திருமால் மல்லாடல் என்ற நடனத்தையும், துர்க்கை மரக்கால் என்ற நடனமும், இந்திராணி கடயம் என்ற நாட்டியத்தையும், முருகப்பெருமான் குடை, துடி போன்ற நடனங்களையும், காமன் பேடியாட்டம் என்ற ஆட்டத்தையும் விநாயகர் விகடக்கூத்து என்ற நடனங்களையும் ஆடி நடனக்களைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இருப்பினும் எல்லாம் வல்ல சிவ பெருமான் ஆடிய திரு நடனங்கள் பல.
திரிகூடமலையாகிய திருக்குற்றாலத்துக்கு வந்த பிரம்மன், திருமால், தேவர்கள் போன்றவர்களுக்காக பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். திருவெண்காடு ஸ்தலத்தில் சுவாத கேது மன்னனுக்காக ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். திருநள்ளாறு தலத்தில் இறைவன் பித்தேறியவராக மனம் போன போக்கில் உன்மத்த நடனம் ஆடினார். நாகையில் அலை போல மேலெழுந்து வீடு நடனம் ஆடினார். திருமறைக்காட்டில் சிவபெருமான் அன்னப்பறவை போல ஹம்ச நடனம் ஆடினார்.

கோழி சிறகை விரித்து ஆடுவது போன்ற குக்குட நடனத்தை திருக்காறாயில் என்ற ஸ்தலத்தில் இறைவன் ஆடிக்காட்டினார். திருவாரூரில் சிவபெருமான், திருமாலின் மூச்சு காற்றுக்கு இணையாக அஜபாநடனம் ஆடிக்காட்டினார் மாயூரத்தில் ஈசன் ஆண்மயிலைப் போல மயூரநடனம் ஆடிக் காண்பித்தார். இதுபோன்ற ஏராளமான நடனங்களை ஆடிக்காட்டிய அந்த பரமன், நெல்லையில் காளிக்காக ஆடிக்காட்டிய நடனம் சங்கர தாண்டவம் ஆகும். அது மட்டும் அல்ல. நெல்லையப்பர் ஆடிக்காட்டிய திரு நடனங்கள் பல. அவர் திருநெல்வேலியில் உள்ள தாமிரசபை, ராஜசபை, திருக்கல்யாணசபை, பரப்பிரம்ம சபை, சபாபதி உறையும் சன்னதிசபை, மானூரில் உள்ள ஆச்சார்யசபை, போன்ற அஷ்டசபைகளில் திருநடனம் புரிந்துள்ளார்.
ஆனந்த நடனம்நெல்லை நாதன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் போது, அன்னை வடிவுடையாளாகிய காந்திமதி அவரை வணங்கி போற்றி துதித்து நின் நடனம் காண விரும்புகிறேன் என்றாள். அதே போல தேவர்களும் துதித்து திருநடனம் காண வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்காக எல்லாம் வல்ல சிவபெருமான் தாமிரசபையில் ஆனந்த நடனம் ஆடினார். இதை கண்ட அனைவரும் வேண்டும் வரம் பெற்று இன்புற்றனர்.அகோர தாண்டவம்அதே போல சிவ பெருமான் திருமால் உள்ளிட்ட, மற்றய தேவர்களுக்காக, அஷ்டசபைகளிலும் அகோர தாண்டவம் ஆடிக்காட்டி அருளினார்.காளியுடன் நடனம்அன்னையானவள் காளிரூபம் கொண்டு, என்னுடன் ஆடி வெற்றிபெற முடியாது என்று சொல்ல. அதற்கு சிவபெருமான் காளியுடன் வாது பேசி தாமிரசபையில் ஒரு காலைத்தூக்கி சங்கர தாண்டவம் ஆடினார். அதுகண்டு காளி வெட்கம் அடைந்து, காந்திமதியாக கோயிலுக்குள் புகுந்தாள்.ஆச்சார்ய சபையில் ஆச்சரிய நடனம்தாருகா வனத்து ரிஷிகளுக்காக, மானூரில் உள்ள ஆச்சார்ய சபையில் பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் சுந்தரவடிவம் கொண்டு ஆச்சரிய நடனம் ஆடினார்.

இதை கண்ட வடிவாள், திருமால் முதலியோரெல்லாம் போற்றி துதித்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் நெல்லை நாதன் வேண்டும் வரங்களைத் தந்து; தேவர்கள் போற்ற ஆலயத்தில் வீற்றிருந்தார். எனவே சித்திரைமாத திருவோண நட்சத்திரதினத்து சபாபதி அபிஷேகம், ஆவணியில் வரும் சதுர்தசியன்று சபாபதி அபிஷேகம், மார்கழி திருவாதிரையில் சூரிய உதயத்தில் ஆருத்ரா தரிசனம், மாசி மாத சதுர்த்தியில் நடராஜரின் அபிஷேகம் போன்றவைகளை காண்போர்களுக்கு முக்தி என்பது விரைவில் கிடைக்கும் என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரான்
8.1.2012
தாமிரசபையில் திருநடனம் கண்டால் என்ன கிடைக்கும்
மலையாள நாட்டில் அன்னதி என்ற நகரத்தில் கொண்டி என்ற பெயர் கொண்டவன் வாழ்ந்து வந்தான். அவன் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளிலும் நீராடவில்லை களவு, கொலை, கொள்ளை போன்ற கொடும் பாவங்களை செய்து காலம் கழித்து வந்தான். இதனால் இவனை பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்துக்கொண்டு அவனை விரட்டிக்கொண்டே வந்தது.அவன் ஒரு சமயம் திருநெல்வேலிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நகர் காற்று பட்டவுடன் அவனுக்கு சிந்தை தெளிவு அடைந்தது. தெளிவு பெற்ற தொண்டி சிந்துபூந்துறையில் நீராடி, நெல்லையப்பர் கோயிலுக்குள் புகுந்து மூலமகாலிங்கத்தையும், வேணுவன நாதரையும் வணங்கி, "வடிவாளை துதித்துப் போற்றி திருவாதிரை தினத்தில் தாமிரசபையில் நெல்லை நாதனின் திரு நடனமும் கண்டான். பின் நகரத்தை விட்டு வெளியேறி வரும் போது அவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாலும், பசியின் காரணமாகவும் படுத்து தூங்கிவிட்டான்.அப்போது நாகன் என்ற கொடும்பாவி, தொண்யிடம் வந்து, இவன் கையில் பொருள் ஏதும் உள்ளதா என பரிசோதித்து, பொருள் இல்லாமையால் தொண்டியை அடித்தான். பிறகு இருவரும் நட்பாயினர். இருவரும் முன் போல வழிப்பறி பண்ணி வாழ்ந்தனர். இருவரின் தொல்லை பொறுக்க முடியாத அரசன் இருவரையும் கொன்றான். அப்போது எமதூதர்கள் இருவரும் செய்த பாவங்களுக்காக தண்டித்தனர். உடனே குறுக்கிட்ட சிவகணங்கள் அவ்விருவரையும் விமானத்தில் ஏற்றி சிவபெருமான் வாழும் கைலாயத்தில் சேர்த்தனர்.தொண்டி தாமிரசபையில் திரு நடனம் கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். நாகன் தாமிரசபை தரிசனம் கண்ட தொண்டியை கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். ஆக தாமிரசபையில் திரு நடனம் காண்பவர்களுக்கு. திரு நடனம் கண்டவர்களை காண்பவர்களுக்கும் முக்தி உண்டு என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.

மேலும் எல்லாம் வல்ல சிவபெருமான் தென்தமிழ் நாட்டில் முதன் முதலாக கால்பதித்த இடமாகிய செப்பறையிலும் பஞ்சலோக படிமஸ் தலங்களாகிய கட்டாரி மங்கலம், கருவேலன்குளம், கரிசூழ்ந்த மங்கலம், தருவை போன்ற ஸ்தலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக திரு நடனம் புரிந்துள்ளார். அகஸ்தியர், லோபா முத்திரை ஹயக்ரீவர், அத்ரி முனிவர், அனுசுயா தேவி போன்ற ரிஷிகளுக்காக, சித்ரகூடசபையில் திரு நடனம் காட்டியும் உள்ளார்.பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் திரு நடனம் புரிந்த பஞ்சசபைகளில் சித்திரசபை (குற்றாலம்) தாமிரசபை (திருநெல்வேலி) ஆகிய இரண்டு சபைகளும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது சிறப்பு. தவிர நெல்லையப்பர் அஷ்ட சபைகளில் திரு நடனம் புரிந்ததும். பஞ்சலோக படிமஸ்தலங்களில் திரு நடனம் புரிந்ததும் தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த பெருமை
 
 
 
 
 
UTHRAKOSA MANGAI NATARAJAR
 
 UTHRAKOSA MANGAI NATARAJAR
 
          UTHRA KOSA MANGAI NATARAJAR WITH ALANKAARAM
 


 
 
VAZHUVOOR GAJA SAMHAARAMURTHY
 
சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.
 
 
 
To view an amazing Natarajar made with word "NATARAJAR" click :
http://psdwithpr.wordpress.com/2011/05/29/part-1-of-create-a-typography-wallpaper-with-custom-text/
 
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment