Saturday 30 November 2013

ஆன்மீக அன்பிதழ் - டிசம்பர் மாத தினசரி ஸ்லோகங்கள்


அமாசோம பிரதட்சிணம் 02.12.2013

அமாசோம பிரதட்சிணம்

நம் முன்னோர், மழை தரும் மரங்களையும்  தெய்வாம்சமாக நினைத்துப் பூஜித்து வழிபட்டனர் .  மரங்களின் அரசனாக விளங்குவது அரசமரம்.

'மரங்களில் நான் அரசமரம்' என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே, கீதையில் அருளுகிறார் என்றால் (அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³:|), அரச மரத்தின் பெருமையினை விவரிக்கத் தேவையில்லை. மரங்களின் அரசன் என்பதாலேயே 'அரசமரம்' என்று அழைக்கப்படும் இம்மரம்,  கரியமில வாயுவை உள்வாங்கி, மற்ற மரங்களை விடவும் மிக அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை படைத்தது.
திங்கட்கிழமையும்(சோமவாரம்), அமாவாசையும் சேர்ந்து வரும் தினங்களில், விரதமிருந்து, அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத் தரும். இதுவே 'அமாசோம விரதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்து, பின் சிவாலய தரிசனம் செய்வதும், அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது.
 
அரசமரத்தின் மருத்துவ குணங்கள்:
அதிகாலை வேளையில் அரசமரத்தைச் சுற்றும் போது, அதிலிருந்து வரும் காற்று, நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி செயல்பட வைக்கும் வலிமையுடையதாக இருக்கிறது. மேலும்,பித்த சம்பந்தமான நோய்களையும், சரும நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. அரசமரப்பட்டை, வேர் ஆகியவற்றை நன்றாகப் பொடிசெய்து கஷாயமாகவோ, அல்லது பால் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினாலோ, பெண்களுக்கு, மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள், கருப்பைக் கோளாறுகள் முதலியவை நீங்கும்.
சிறப்பான இருதய வடிவம் கொண்ட இம்மரத்தின் இலைகளை நல்லெண்ணெய் தடவி, நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றிய விளக்கொளியில் காட்டினால் பழுப்பு நிறமடையும். அதை உடம்பில் ஏற்படும் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் விரைவில் குணம் தெரியும். அதிகாலையில் இம்மரத்தைச் சுற்ற,  இரத்த ஓட்டம் சீர்ப்படும். மனஅழுத்தம் போன்ற நோய்கள் நீங்கும்.
ஆன்மீக ரீதியாக, அரசமரத்தின் முக்கியத்துவம்:
அரசமரத்திற்கு அஸ்வத்த மரம் என்றும் பெயர் உண்டு. ஹோமங்களில் பயன்படுத்தப்படும் சமித்து எனும் சொல், அரசங்குச்சிகளையே குறிக்கும். அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும் போது வெளிவரும் புகை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான ப்ரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை உடையது. காற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியும் அந்தப் புகைக்கு உண்டு. ஆனால் சமித்துகளுக்காக அன்றி வேறெந்தக் காரணத்துக்காகவும் அரசமரத்தை வெட்டலாகாது. அவ்வாறு செய்தால் அது பெரும் பாவமாகும்.
இம்மரம் ஸ்ரீ விஷ்ணுவின் வலக்கண்ணில் இருந்து தோன்றியதாக பத்மபுராணம் கூறுகிறது. அரசமரத்தின், வேரில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புத்தர் ஞானஒளி அடைந்த போதிமரம் எனப்படுவது அரசமரமே என்றும் ஒரு கூற்று இருக்கிறது.
ஆற்றங்கரையோரங்களிலும், குளக்கரைகளிலும் அரசமரத்தை நட்டு வளர்ப்பார்கள்.  ஏனெனில், அம்மரத்தின் நிழல் பட்ட நீர் நிலைகளில் நீராடுவது, பிரயாகையில்(திரிவேணி சங்கமத்தில்) நீராடுவதற்குச் சமம்.
திருவாவடுதுறை, திருநல்லம் போன்ற சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி ஆகிய வைணவத் திருத்தலங்களிலும் தல விருட்சமாக அரசமரமே விளங்குகிறது. இவ்வாறு கோவிலுக்குள் இருக்கும் அரசமரம் பன்மடங்கு அருட்சக்தி உடையதாக விளங்குகிறது. நாகதோஷ நிவர்த்திக்காக, அரசமரத்தின் அடியில் நாகர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்து வைப்பது வழக்கம். இம்மரத்தின் அடியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, பெண்கள், மஞ்சள் குங்குமத்தை இம்மரத்தின் அடியில் தூவி வழிபடுவதைக் காணலாம்.
அரசமரத்தின் கன்றை ஒரு நல்ல நாளில் ஊன்றி வைத்து, நீர் வார்த்து, கவனமுடன் வளர்க்க வேண்டும். பின், ஏழு வருடம் கழித்து, அதற்கு மனிதர்களுக்கு செய்வது போலவே, உபநயனம் செய்வித்து, ஒரு வேப்பங்கன்றை அதனருகில் நட்டு, இரண்டிற்கும் திருமணம் செய்வித்து வளர்த்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும், முன்னோர்கள் முக்தி நிலை எய்துவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு அரசமரமும் வேப்ப மரமும் இணைந்து இருக்கும் இடங்களில் மிகுந்த சாந்நித்யம் நிலவுவது கண்கூடு. மேலும், இம்மரம் இருக்கும் இடத்திலிருந்து முப்பது மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் கோவிலில் மிகுந்த சாந்நித்யமும் அதன் விளைவாக, மன அமைதியும் கிட்டும் என்று கூறப்படுகிறது.
அஸ்வத்த நாராயண விரதமும் பூஜையும்:
திங்கட்கிழமையும் அமாவாசையும் சேரும் நாட்களில், விரதமிருக்கும் போது, அதற்கு அங்கமாக, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும். இதை சுமங்கலிகள், புத்ர சந்தானமும், தீர்க்க ஸௌமாங்கல்யமும் ஏற்பட இதைச் செய்வது அவசியம். இந்தப் பூஜையை அரசமரத்தின் அடியில் செய்யலாம். அல்லது,  பூஜை அறையில் அரசமரக் கொத்தை வைத்துப் பூஜிக்க வேண்டும். 

இந்த விரதம் சம்பந்தமாக வழங்கப்படும் புராணக்கதை:
மகாபாரதத்தில், பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு, இவ்விரத மகிமையைக் கீழ்வருமாறு கூறினார்.
காஞ்சி நகரத்தில், தேவஸ்வாமி என்பவர், தனவதி என்னும் மனைவியுடனும், ஏழு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஏழு ஆண் மக்களுக்கும் திருமணமாகியது. ஒரு நாள், வேத வேதாந்தங்களில் கரை கண்ட ஒரு அந்தணர், தேவஸ்வாமியின் வீட்டுக்கு பிக்ஷையின் பொருட்டு வருகை புரிந்தார். 
அவரைத் தகுந்த முறையில் உபசரித்த தேவஸ்வாமி, தன் மனைவி, மருமகள்கள், மற்றும் மகளை, அவரிடம் ஆசி பெறச் செய்தார். மற்றவர்கள் நமஸ்கரிக்கும் போதெல்லாம், 'தீர்க்க சுமங்கலி பவ' எனும் நல்லாசி கூறிய அவர், குணவதி என்னும் பெயர் கொண்ட, தேவஸ்வாமியின் மகள் நமஸ்கரிக்கும் போது மட்டும், 'திருமணம் நடக்கும் போது, சப்தபதி நேரத்தில், இப்பெண், கணவனை இழப்பாள்' என்றுரைக்க, அதிர்ந்த தேவஸ்வாமி தம்பதியினர், இந்தப் பெருந்துயரம் ஏற்படாதிருக்க வழி கேட்டுப் பிரார்த்திக்க, சிம்ஹள தேசத்திலிருந்து, சோமவதி என்னும் பெண்ணை, திருமணத்திற்கு அழைத்து வந்தால், அப்பெண்ணின் உதவியால் துயர் தீரும் என நல்வழி கூறினார்.
இதைக் கேட்ட, தேவஸ்வாமியின் கடைசிப் புதல்வனான, சிவஸ்வாமி என்பவன், பெற்றோரிடம் அனுமதி பெற்று,  தன் தங்கையாகிய குணவதியையும் அழைத்துக் கொண்டு, சிம்ஹள தேசம் நோக்கிப் பயணமானான். இரவில், ஒரு பெரிய ஆலமரத்தினடியில் இருவரும் தங்கினார்கள். அம்மரத்தில் அண்ட பேரண்ட பக்ஷி என்னும் மிகப்பெரிய பக்ஷியின் கூடு இருந்தது.  இரவு கூட்டை அடைந்த தாய்ப்பறவை, தன் குஞ்சுகளுக்கு உணவூட்டத் தொடங்கியது.  ஆனால், குஞ்சுகளோ உணவை ஏற்காமல்,  'அம்மா, இம்மரத்தடியில் இருவர் பசித்திருக்க நாங்கள் மட்டும் எப்படி உணவை ஏற்க முடியும்?'  என்று வினவின.  தாய்ப்பறவை, 'அவர்களுக்கும் உணவளித்து, அவர்கள் வந்த காரியத்தையும் நிறைவேற்றி வைக்கிறேன்!' என்று உறுதியளித்த பின்பே,  அவை உணவுண்டன.  

பின், தாய்ப்பறவை, சிவஸ்வாமிக்கும் குணவதிக்கும் உணவுதந்து உபசரித்து,பின் அவர்கள் வந்த காரியத்தை விசாரித்து, இருவரையும் சிம்ஹளதேசம் கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்கு சோமவதியைக் கண்டு விவரம் கூறியதும் அவளும் உடனே கிளம்பி, அவ்விருவருடன் காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.
தேவசர்மா என்பவரின் மகன் ருத்ர சர்மா என்பவருக்கும், குணவதிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  திருமண தினத்தன்று, சப்தபதி நேரத்தில் ருத்ரசர்மா இறந்து விழ, அனைவரும் பதறித் துடித்தனர். இதைக் கண்ட சோமவதி, 'கவலை வேண்டாம். நான் இது நாள் வரையில் கடைபிடித்து வந்த 'அமாசோம விரதத்'தின் பலனைக் குணவதிக்குத் தருகிறேன்' என்று கூறித் தாரை வார்த்துக் கொடுத்தாள். உடனே, ருத்ரசர்மா, உறக்கம் நீங்கி எழுந்தவன் போல் எழுந்தான். சோமவதியும், இவ்விரதத்தைச் செய்யும் முறையை குணவதிக்கு உபதேசித்து,  விடைபெற்றுத் தன் ஊர் சேர்ந்தாள்.

இக்கதையால், அக்காலத்தில், நீதி, தர்மம் முதலியவை எவ்வாறு தழைத்தோங்கியிருந்தது என்பதை அறியலாம். தனக்கு பிக்ஷையிட்ட இல்லத்தில் நேரவிருக்கும் துன்பத்தை அறிந்து, அதைத் துடைக்க வழி செய்த அந்தணர், நன்றி மறவாமைக்கு நல்லதொரு உதாரணமாகிறார். தன் மரத்தடியில் வந்து தங்கிய அதிதிகளை உணவளித்து உபசரித்ததோடு, அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்ற பறவையின் செயல், விருந்தினரை உபசரிக்க வேண்டிய முறையை, அக்காலத்தில் பறவைகளும் கடைப்பிடித்து வந்ததை எடுத்துக் காட்டுகிறது. மேலும், அதன் குஞ்சுகளும், விருந்தினர் உண்ணும் முன் தாங்கள் உண்ணுதல் கூடாது என்று மறுத்தது எத்தனை சிறப்பு?. முன்பின் அறியாதவராயினும், அவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம், தன்னால் நீங்குமென்றால், தன்னாலான உபகாரத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு, சோமவதி திருமணத்திற்கு வருகை புரிந்தாள். மேலும், தன் விரதப்பலனை தாரை வார்த்துக் கொடுக்கிறாள். பரோபகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை. புராணக்கதைகளை, கட்டுக்கதைகள் என்று எண்ணாமல், அதில் இருக்கும் நீதிகளை, வாழ்வில் கடைப்பிடிப்பது நல்லது.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறை: 
இதை விரதமாக எடுத்தால், ஒவ்வொரு வருடமும், அமாவாசையும் திங்கட்கிழமையும் வரும் நாளில், அரசமரத்தைப் பூஜை செய்து, பிரதட்சிணம் செய்ய வேண்டும். விரதம் எடுக்கும் வருடத்தில், நூற்றெட்டு அதிரசங்களைச் செய்து, நூற்றி எட்டு கிழங்கு மஞ்சள்கள் வாங்க வேண்டும். அரசமரத்தின் அடியில் முறைப்படி, வைதீகரை வைத்து, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும். பூஜையும் பிரதட்சணமும் நிறைவடையும் வரை உபவாசம் இருக்க வேண்டும்.  அதன் பின், ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளுதல் சிறப்பு.
பூஜை  நிறைவடைந்த பிறகு,
மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே |
அக்ரத: சி'வரூபாய விருக்ஷராஜாய தே நம: ||
என்ற மந்திரத்தைச் சொல்லி, மரத்துக்கு நூற்றி எட்டு பிரதட்சணங்கள் செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளும் , ஒரு அதிரசமும் போட வேண்டும். மரத்தின் முன் ஒரு தட்டையோ, பாத்திரத்தையோ வைத்து, இவ்வாறு போடலாம். 
விரதம் எடுப்பதற்கு, அதிரசம் செய்ய சௌகர்யப்படாவிட்டால், மஞ்சளை மட்டும் போடலாம். அல்லது முதல் சுற்றுக்கு மஞ்சள், இரண்டாவது சுற்றுக்கு குங்குமச்சிமிழ், மூன்றாவதற்கு, வெற்றிலை பாக்கு, நான்காவதற்கு பூ இவைகளை வரிசையாகப் போட்ட பிறகு, மீதிச்சுற்றுக்களுக்க்கு சௌகரியம்போல் எதை வேண்டுமானாலும் போடலாம். இனிப்புப் பண்டங்கள் தான் வேண்டுமென்பதில்லை. 108 கண்ணாடி, சீப்பு முதலியவற்றைக் கூடப் போடலாம். 
இயலாதவர்கள், 108 பூக்கள் அல்லது வெல்லக்கட்டிகளைச் சமர்ப்பிக்கலாம்.
பிரதட்சணம் செய்யும் போது மரத்தைத் தொடக்கூடாது. சனிக்கிழமையன்று மட்டும் தான் மரத்தைத் தொடலாமென்றும் ஒரு கூற்று உள்ளது.  மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது.
இவ்வாறு பிரதட்சணம் செய்த பிறகு, புனர் பூஜை செய்து,மரத்திற்கு சமர்ப்பித்தவற்றில் சிலவற்றை விரதத்தை நடத்தி வைத்தவருக்கு தாம்பூலம் தட்சணையுடன் அளித்து விட்டு, மீதியுள்ளவற்றை விநியோகிக்க வேண்டும். அதன் பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.
விரதம் எடுத்தவர்கள், இந்த விரதத்தை, சௌகர்யப்பட்ட வருடத்தில் அமாவாசை, திங்கட்கிழமையன்று பூரணமாக வரும் நாளில் முடித்து விடலாம். அவ்வாறு முடிப்பதற்கு, ஐந்து கலசங்கள், அரசமர உருவம் பொறித்த வெள்ளித் தகடு ஒன்று, பிரதிமைத் தகடுகள்(வெள்ளியில்)ஐந்து, கலசங்களுக்கு சுற்ற வேஷ்டி, துண்டுகள்(வஸ்திரம் ஆகியவை தேவை. மற்ற விரதங்களுக்குச் செய்வது போல், பஞ்சதானம் (வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் முதலியன) செய்ய வேண்டும். அதிரசம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
விரதத்தை நிறைவு செய்யும் வருடத்தில், எப்போதும் போல் அரசமரத்துக்குப் பூஜை செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் போட்டு பிரதட்சணம் செய்து விட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு வீடு வந்து விட வேண்டும்.  அதன் பின் ஐந்து வைதீகர்களைக் கொண்டு, கலசங்களை ஸ்தாபனம் செய்து பூஜித்த பின், பஞ்ச தானம்  செய்து, வைதீகர்களுக்கு போஜனம் அளித்து, அவர்கள் சாப்பிடும்போது இலையில் அதிரசத்தையும் போட வேண்டும். பிறகே, மீதியுள்ளவற்றை விநியோகிக்கலாம்.
இதை விரதமாக எடுக்காவிட்டால்:
இம்மரத்தைப் பிரதட்சணம் செய்தால் அனைத்துப் பாவங்களும், சாபங்களும் உடனே நீங்கும். எனவே, இதை விரதமாக எடுக்க சௌகர்யப்படாவிட்டால் கூட பிரதட்சணம் செய்வது சிறப்பு. அவ்வாறு செய்ய விருப்பப்பட்டால், நூற்றி எட்டு இனிப்புப் பண்டங்களை, அல்லது பூக்கள் , வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொண்டு, அதிகாலை நேரத்தில் அரசமரத்தைப் பிரதட்சணம் செய்து, ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒவ்வொரு இனிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும். கூடுமானவரை ஏழு மணிக்குள் வலம் வருவது சிறப்பு. அந்நேரத்தில் ஓசோன் வாயுவை அதிக அளவில் அரசமரம் வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது. இயலாதவர்கள், பத்து மணிக்குள்ளாவது பிரதட்சணத்தை முடித்துவிடவேண்டும்.
பிறகு,  மரத்துக்கு சமர்ப்பித்தவற்றை, சிறிதளவு வீட்டுக்கு எடுத்துவைத்துக் கொண்டு, மீதியை விநியோகிக்க வேண்டும்.  பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு வந்துவிடலாம்.
மேலே  பிரதட்சணம் செய்வதற்கென்று குறிப்பிட்ட‌ மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்தவாறே சுற்றுவது சிறப்பு.
நூற்றி எட்டு முறை சுற்ற இயலாதவர்கள், இயன்ற அளவு சுற்றலாம். மூன்று முறை  சுற்றினால்,  விருப்பங்கள் நிறைவேறுதலும், ஐந்து முறை சுற்றினால், எக்காரியத்திலும் வெற்றி அடைதலும், ஒன்பது முறை சுற்றினால்,  புத்திர பாக்கியம் அடைதலும், பதினொரு முறை வலம் வந்தால்  எல்லா போக பாக்கியங்கள் கிடைத்தலும்  நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம்  செய்த பலன் அடைதலும் கிடைக்கும்  என்று புராணங்கள் கூறுகின்றன.
அமாசோம விரதத்தன்று, அரசமரத்தைப் பூஜித்து, அனைத்து தேவர்களின் நல்லாசிகளை பெறுவோம்!!
 
 

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Saturday 16 November 2013

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்

 

கார்த்திகை விழா குறித்து புராணங்கள் பல்வித காரணங்களைச் சொன்னாலும் மூன்று காரணங்கள் முக்கியமாக போற்றப் பெறுகின்றன.

01. மலையாய் அமர்ந்த மகாதேவன். அடி - முடிகாண முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும்.

02. தீப்பொறியாய் உதித்த சரவணன். ஈசனின் ஆறுமுகங்களிலிருந்து தீப்பொறியாய் உதித்த சண்முகக்கடவுளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள்.

அவர்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கும் என்பது முருகப்பெருமான் தந்தருளிய வரம்.

அதன்படி இந்நாள் கார்த்திகேயக் கடவுளுக்குரிய நாளாகவும் போற்றப்பெறுகிறது.

03. தீபமாக நின்ற திருமால் ஒருமுறை கலைவாணிக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்று நடத்தினான்.

இதனால் சினந்த சரஸ்வதி யாகத்தை அழிக்க மாய நலன் என்ற அசுரனை ஏவினாள்.

அவன் யாகத்தை தடுக்கும் பொருட்டு உலகம் முழுமையும் இருட்டாக்கினான். உடன் பிரம்மன் திருமாலை வேண்டி நிற்க, பகவான் ஜோதியாய் ஒளிர்ந்து இருளை விரட்டி யாகத்தை காத்தருளினார். இப்படி ஜோதியாய் தோன்றிய விஷ்ணுவை தீப உருவில் வணங்குவர் வைணவர்கள்.

திருக்கார்த்திகையன்று குறிப்பிட்ட நியதிகளோடு, தீபங்கள் ஏற்றி கார்த்திகை தெய்வங்களை வழிபடுவதால் நம் வாழ்விலும் துன்ப இருளகன்று இன்பவொளி பிறக்கும்.



திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 
10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முதல் நாள கொடியேற்றத்துடன் விழா தொடங்கும்.   இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும்   பஞ்ச மூர்த்திகளான கணபதி, முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு  
வாகனத்தில்   பஞ்சமூர்த்திகள் எடுத்துச்செல்லப்படுகிறார்கள். 

பத்தாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவின் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இத்தீபம் அருணாச்சலேஸ்வரரின் உருவத்தை குறிப்பதால் உலகம் எங்கும் உள்ள பக்தர்கள் இக்காட்சியை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

கீடாஹா: பதங்காஹா: மசகாச்ச: வ்ருக்ஷாஹா :
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவாஹா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ராஹா:!!

‘புழுக்களோ பக்ஷிகளோ அல்லது ஒரு கொசுவஹத்தான் இருக்கட்டும். அந்தக் கொசுவோ நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும் பூமியிலும் எத்தனை தினுசான ஜீவா ராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ,

மனுஷ்யர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராமணனோ பஞ்சமனோ எவனானாலும் சரி எதுவானாலும் சரி இந்த தீபத்தை பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவ்ருதியாகி இன்னொரு ஜன்ம எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’ என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்

திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு

திருநாவுக்கரசர் திருவண்ணாமலையில் பாடிய பதிகம்.

நான்காம் திருமுறை. பதிகம் 63. திருவண்ணாமலை : திருநேரிசை

திருச்சிற்றம்பலம்:

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்தோட் சுடர்மழுப் படையி னானே
தியே அமரர் கோவே அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவிலேனே. 1

பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே அணியணா மலையு ளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.2

உருவமு முயிரு மாகி ஓதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொலியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே. 3

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே. 4

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே. 5

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த வண்ணா மலையுளா யலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே. 6

இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி யணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே. 7

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி லேனே. 8

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
லுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. 9

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. 10


திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு, அருணகிரிநாத சுவாமிகள்
திருவண்ணாமலையில் பாடிய திருப்புகழ்.

கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.


தீப தரிசனத் தத்துவமாக ஒரு பாடலை சிறீ அருணாசல ஸ்துதிபஞ்சகம் எனும்
நூலில் காணநேர்ந்தது. அப்பாடல்,

இத்தனுவே நான் ம் எனும் மதியை நீத்து அப்
புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்
அத்துவிதமாம் மெய் அகச்சுடர் காண்கை பூ
மத்தி எனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே.


 


அருணாச்சலேஸ்வரர் கோயில் :

 

 

அண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த உலக புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். தென் இந்தியாவை ஆண்ட பல மன்னர்களில் குறிப்பாக பாண்டிய மன்னர், சோழ மன்னர், மற்றும் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் இக்கோயிலின் வளர்ச்சிக்காக பல வழிகளில் உதவிபுரிந்துள்ளனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்கள் சிவன் மற்றும் பார்வதிதேவி. இங்கு சிவன் உலகை உருவாக்கிய பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் உலகளவில் மிகப்பெரிய கோயிலென பெயர்பெற்றது. இக்கோயிலை பற்றி பல விபரங்கள் தமிழ் புராண புத்தகங்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலின் மகிமையை போற்றி தமிழ் கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ளனர்.திருவண்ணாமலை மேலும் ஒரு சிறந்த பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

அக்காலகட்டத்தில் ஆண்ட பல மன்னர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சிக்கும் வசதியடையவும் மிகுந்த பொருளுதவி, பராமரிப்பு ஆகியவை அளித்து இக்கோயில் பிரபலமடைய செய்துள்ளனர். பல பக்தர்களும் பொதுமக்களும் திருவண்ணாமலை வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்துள்ளனர். இக்காரணத்தால் கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக இக்கோயிலின் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது

 இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் உள்ளன. பதினைந்தாம்  நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாக விளங்குகிறது. கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்  நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் உள்ளது. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவாகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் உள்ளது. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது.குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசாலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.

இங்கு அக்னி வடிவத்தில் உள்ள சிவன் வழிபாடு ஓவ்வொரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது பல்லாண்டு காலமாக நடந்து வரும் பழக்கமாகும். இந்நாள் மிக விசேஷமான நாளாககார்த்திகை தீபத்திருநாள்என்று அழைக்கப்படுகிறது. இதை காண உலகமெங்கும் உள்ள சிவனடியார் பக்தர்கள் இங்கு கூடி தீபத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியமான காரியம் என்பது மக்களிடையே நிலவும் ஆழ்ந்த நம்பிக்கை.இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன் அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதிதேவி அபிட்டகுசலாம்பாள் என்ற பெயர் பெற்றும் விளங்குகின்றனர். இக்கோயில் சிவனுடைய சிறப்பான கோயில் என விளங்குவதற்கு காரணம் இங்கு சிவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் காட்சி தருவதால் சிறப்புபெற்றது. மற்ற நான்கு பூதங்களான ஆகாயம், நீர், வாயு, மற்றும் நிலம் சேர்ந்து அமைந்தது தான் இவ்வுலகம். இந்த நான்கு பூதங்களும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வெவேறு கோயில்களில் சிவனை பிரதிபலிகின்றன. சிவன் திருவானைகாவலில் நீர் வடிவத்திலும் சிதம்பரத்தில் ஆகாய வடிவத்திலும் காஞ்சிபுரத்தில் நிலம் வடிவத்திலும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலில் வாயு வடிவத்திலும் காட்சியளிக்கிறார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்றும் பாரம்பரிய முறையில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைமுறையில் இருந்துவருகிறது. இங்கு வாழும் மக்கள் மற்றும் கோயிலுக்கு சம்மந்தமான பூசாரி நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள், சிப்பந்திகள், காவலாளிகள், பஜனை குழுவினர், பல்லக்கு தூக்குபவர்கள், வித்வான்கள், மற்றும் இதர கைவினை கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அணைத்து கோயில் வேளைகளில் ஈடுபட்டு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து சரிவர செய்து வருகின்றனர்.குறிப்பாக தெற்குப்புரத்தில் உள்ள தெப்பகுளத்தில் இருக்கும் கங்கா தீர்த்தத்தை யானையின் மீது வைத்து தெற்கு புரத்தில் திருமஞ்சன கோபுரம்வழியில் கொண்டுவந்து இந்நீரை இரண்டாவது பிரகார நுழைவாயிலை சுத்தம் செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது.பின்பு சிவன் மற்றும் பர்வதிதேவியை ஊர்வலமாக சிவனை ராஜகோபுரம் உள்ள கோயிலுக்கும் பார்வதியை உண்ணாமலையம்மன் கோயிலுக்கும் எடுத்துச்செல்கிறார்கள். அதன் பின் பூஜைகள் ஆரம்பித்து காலையில் தொடங்கி ஒரு நாள் முழுவதும் ஆறு முறை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் சிவனை சேவித்து பௌர்ணமி அன்று மாதம் ஒரு முறை கிரிவலம் வருகின்றனர். சுமார் 5 லட்சம் பக்தர்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமி நாள் அன்று 13 கி.மீ நடந்து கிரியை சுற்றி வருவது வாழக்கமாக உள்ளது. இக்கிரிவலம் செல்பவர்கள் அனைவரும் மனதில் அமைதியுடனும், உடல் வலிமையுடனும் இருக்க உதவுகிறது

 

திருவண்ணாமலை வரலாறு :

திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றி பாடியுள்ளனர். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில் உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்கு கிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின்
புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது. அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள், கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.

மேலும்
விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார்
இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம். ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது

 

கிரிவலம் :

திருவண்ணாமலையில்  ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪