Tuesday 16 September 2014

புரட்டாசி மாதம்

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.

மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.

இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர்.

இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் அக்-4) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம்.

முடியாதவர் ஒரு நாள் மஹாலயம் செய்து மற்ற நாள்களில் தர்ப்பணம் (எள்ளுத் தண்ணீர் விடுதல்) செய்யலாம். ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது.

தென்மேற்கு திசையை, "கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். ஏதாவது வேண்டுதல் வைத்து, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும்.

அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்-3). அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்.21, 28, அக்.6, 13) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக் டோபர் முதல்வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு அக்.5, 13) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.

தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

சரஸ்வதி பூஜை:

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் இருக்கும் போது சரஸ்வதியை எழுந்தருளச் செய்ய வேண்டும். இது தேவியின் அவதார நாள். திருவோண (சிரவண) நட்சத்திரம் உச்சமாகும் நாளில் சரஸ்வதி பூஜை நிறைவு பெறுகிறது. அன்றே விஜயதசமி.

ஆயுத பூஜை:

தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜை. இவர்கள் மிகச் சிறிய ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் பூவும், பொட்டுமிட்டு வழிபடுகின்றனர். காரணம், செய்யும் தொழிலே தெய்வம். அத் தொழில் எத்தொழிலாயினும் வணக் கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியதே.

இந்த அடிப்படைகளை உணர்த்தும் வழிபாடுகளே நவராத்திரியின் போது, முப்பெரும் சக்திகளுக்குள் அடங்கியிருக்கும் ஒன்பது சக்திகளையும் வழிபட வேண்டும். அப்போது ஒரு சக்தியை முதன்மையாகவும், மற்ற எட்டுச் சக்திகளைப் பரிவாரச் சக்திகளாகவும் கருத வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாகக் கருதி வழிபடுவது வழக்கம்.

நவராத்திரியின் எட்டாம் நாளை மகாஅஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடு கின்றனர். நவராத்திரி ஒன்பது நாள்களும் வழிபட முடியாதவர்கள் இந்த நாள்களில் வழிபடலாம். நவராத்திரி வழிபாடு முழுக்க முழுக்கப் பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவங்களுடைய பெண்கள் அனைவரும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த வழிபாட்டால் கன்னிகள் திருமணப்பலன் பெறுவார்கள். இளைய சுமங்களிகள் பெறுவது மகப்பேற்றுப் பலன். எல்லாச் சுமங்களிகளும் பெறுவது மாங்கல்ய பலன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி- மன அமைதி- அனைத்திலும் மன நிறைவு. எனவே, நவராத்திரியை எல்லாப்பெண்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். இந்நேரத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பது சிறப்பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின்றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில்களில், "பாரிவேட்டை' எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.

புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் தசமியே விஜயதசமி. துர்க்கை, எருமைத் தலையைக் கொண்ட மகிஷா சுரனோடு ஒன்பது இரவுகள் போரிட்டாள். இந்த இரவுகளே நவராத்திரி என்ற பெயரைப் பெற்றன. அவனை வதைத்த பத்தாம் நாள் விஜய தசமி. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாம் நாள்.

ஆணவம் அடியோடு அழிந்த நாள். அறியாமையை அறிவு வென்ற நாளைக் குறிக்கிறது. விஜயதசமி, பல குழந்தைகளின் பள்ளிக் கல்வி இன்றுதான் ஆரம்பமாகும். இன்று தொடங்குகிற அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.

பழைய பெருமைகளும், சிறப்புகளும், சற்றும் குன்றாமல் தசரா பண்டிகை இப்போதும் உயர்வாகவும் பல சிறப்புகளுடனும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தசரா மிக கோலாகலமாக நடத்தப்படுகிறது. முருகனுக்கும் இம்மாதத்தில் விழா உண்டு.

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பாலபிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர்ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நடக்கும். அங்குள்ள காசி விஸ்வநாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

புதன்கிழமை கிரிவலம் : 

இன்று(புதன்கிழமை) கிரிவலம் செய்பவர்க்கு ஸ்ரீபூத நாராயணப் பெருமாளே ஏதேனும் ஒரு வடிவில் துணை வந்து கிரிவலம் முழுவதும் வழிகாட்டிச் செல்வாராம். இன்றைய கிரிவலத்தால் கலைகளெல்லாம் கசடற கற்கும் திறன் பெறுவார்கள்.

நியாயமான உத்தியோக உயர்வும், தொழில் திறமையும் ஏற்படும். வாராக்கடனும் வசூலாகும் பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலித்துவமும் சந்தான பாக்கியமும் இந்தப் புதன் கிரிவலத்தால் கிட்டும்.

 திருவேங்கடமுடையான்

வேங்கடேச சுப்ரபாதத்தில் வரும் ஒரு  ஸ்லோகம் இது
ஸ்ரீவைகுண்ட வ்ரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே
ரமயா ரம மாணாய  வேங்கடேசாய மங்களம்
பரமபதத்தில் பரவாசுதேவன் ரூபத்தில் இருந்துகொண்டு பக்தரக்ஷணம் எண்ணும் தன் காரியத்தை நன்கு நிறைவேற்ற இயலாமல் (இந்த  கலியுகத்தில்) எம்பெருமான் திருமலையில்  ஸ்வாமி புஷ்கரிணி தீரத்தில் திருவேங்கடமுடையான் ரூபத்தில் அர்ச்சையாய் எழுந்தருளியிருந்து பக்தரக்ஷணம் எனும் காரியத்தை நன்கு நிறைவேற்றுகிறான். மஹா லக்ஷ்மியும் திருமலையில் தனிக் கோயில் கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோவிலாகக் அமைத்துக் கொண்டாள் அத்தகைய திருவேங்கடையமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

இவ்வாறு கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், ஏழுமலை வாசன், ஸ்ரீநிவாசன், நெடியோனாகிய திருவேங்கடவன் திருமலையில் இந்த கலியில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளியது புரட்டாசி மாதம் திருவோணத்தன்றுதான். ஆகவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம். இதை பெருமாள் மாதம் என்றும் அழைப்பர். அதுவும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அவரை வழிபட மிகவும் உகந்தது.

பலர் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பர். இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து பெருமாளை வழிபடுவர். பலர் இல்லங்களில் சனிக்கிழமையன்று வேங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவர். 

சிறு வயதில் நாங்கள் நெற்றியில் திருமண் தரித்து, சொம்பு கையில் ஏந்தி வீடு வீடாக சென்று “நாராயண மூர்த்திக்கு” என்று  அரிசி பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு வந்து அதில் மாவிளக்கு செய்து பெருமாளுக்கு படைத்து வழிபடுவோம். அன்று அவ்வாறு பிச்சை கேட்டு வருபவர்களுக்கு அரிசி பிச்சையும் போடுவோம்.

பார்த்தசாரதிப் பெருமாள்

நம்முடைய பாவங்களை எல்லாம் பொசுக்கும் திருவேங்கடமாம் ஏழுமலையில்  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால், நெடியானான திருவேங்கடவன் "புரட்டாசி மாத திருவோண நாளை" தீர்த்தநாளாகக் கொண்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். ஆதி காலத்தில் பிரம்மாவே இந்த உற்சவத்தை நடத்தியதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் மலையப்பசுவாமி காலையும் மாலையும் சிறப்பு அலங்காரத்தில்  பல் வேறு வாகன சேவை தந்தருளுகின்றார். இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஐந்தாம் நாள் இரவின் கருட சேவையாகும். அன்றைய தினம் மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், வைர முடி தாங்கி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அணிந்து அனுப்பிய மாலையில்  மூலவராகவே மாட வீதீ வலம் வந்து  சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.  

மூலவராக மலையப்பசுவாமி கருட சேவை

புரட்டாசி மாதத்தில் புதன் உச்சம் புதனின் அதி தேவதை பெருமாள் ஆவார். ஆகவே  புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.  இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான்.  அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த  உகந்த நாள்  ஆயிற்று.


புரட்டாசி  விரதத்தை உண்மையான பக்தியுடன் அனுசரித்த ஒரு பக்தரின் அனுபவம் மிகவும் சுவையானது    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.

திருமலைக்கு அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், ஏழு மலையானின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக  இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது தான் இந்த கோரிக்கை.



மலையப்ப சுவாமி

இவர் தினமும் மண்பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்கமல். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ”ஏடுகொண்டலு வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா…’ 
ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, கோவிந்தா, கோவிந்தா”,  என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களையே உண்மையான மலர் தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.



வடுவூர் இராமர் 

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தார் தொண்டைமான் என்னும் சக்கரவர்த்தி. அவர் பெருமாளின் பக்தர் மட்டுமல்ல பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஒருவர்.   ஒருநாள் அவர்  ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றார். பெருமாளுக்கு  அர்ச்சனை செய்வதற்காக  அவர் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தார்.  அவர் அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக்  இருந்ததை கவனித்தார். தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டார். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

மறுநாளும் அவர் திருவேங்கடவனின்  சன்னிதிக்கு வந்த சமயம், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்ததைக் கண்டு  குழம்பிப் போனார்.  அவரது கனவில், சீனிவாசப் பெருமாள் தோன்றினார். “மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றானர் மன்னன் . அவர், பெருமாளின் மண் சிலைக்கு மண் பூக்களால் அர்ச்சனை செய்து  கொண்டிருந்ததைக் கண்டார் “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றார் தொண்டைமான் சக்கரவர்த்தி.

அதற்கு அந்த பக்தர் “அரசே… நானோ பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் வாடும். எனவே தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.

இதைக் கேட்ட தொண்டைமான் மன்னன்  மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு  செல்வம்  அளித்தார்.  குசேலனைப் போல  ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் அவர் நினைவாக  திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

. புரட்டாசி சனிக்கிழமையின் போது பல இல்லங்களில் கருடபத்து சேவிப்பது வழக்கம்.  “கருடன் மீதீல் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே” என்று இந்த கருடப்பத்தில் வருவதால் அன்று.. “ஆதி மூலமே”  என்றழைத்த யானைக்கு கருடன் மீதில் அமர்ந்து வந்த காத்தருளிய கண்ணன் நம்மையும் காத்தருள்வான் என்பது திண்ணம். இதோ கருட பத்து.


ஸ்ரீ:
கருடப்பத்து
ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியேய ருக்கன் பதினெட்டுஞ் சேரும் 
காரணனே கருமுகில் பொன்மேனி சேருங் கருணைபெரு மஷ்டாக்ஷரங் கலந்து வாழும் 
வாரணனே லட்சுமியோடெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா நேயா
ஆரணனே ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (1)


மந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ்சேரும் வாழ் கிரக மொன்பதுமே வந்து சேரும்
கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நூல் வேதங் கலந்து வாழும்        
நந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற 
ந்தரமாய் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (2)


மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ 
சீல முதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே சிவனுடைய திருநாமம் நீதானாகும் 
காலமுதல் ஓம் அங் உங் மங் றீங் கென்றே கருணை பெருமிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங் கையேந்துங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (3)


நவ்வென்றும் கிலியென்றும் ஓம் சிவாய வென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்காரரீங்காரமாகித் தவமுடைய இவ்வெழுத்தும் நீதானாகும்,
ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்துபோற்ற 
அவ்வென்று ரகுராமா கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (4)

உதிக்கின்ற சிவசொரூப முனக்கேயாகும் ஓம் அவ்வும் உவ்வும் கிலியுமென்றே 
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சைமுகில் மேனியனே பனிந்தெனுன்னை                                                     
விதிக்கிசைந்த மெய்ப்பொருளே அரிகோவிந்த விளக்கொளி போல் மெய்தவமே விரும்பித்தாதா அதற்கிசைந்த நடம் புரியுங் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் புரிவாயே. (5)

வேதமுதலாயிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய் 
பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணை வருவாய் யசோதைபுத்ரா 
நாதமுதல் வித்துவா யுயிர்க்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் 
வாதபிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(6)

முக்கோண
நாற்கோண மொழிந்தைங்கோண முச்சுடரேயறு கோண மெண்கோண மாகும்
ஷட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும்  
இக்கோணம் இது முதலாய் வகாரமட்டும் இறைவனாய்த் தானிருந்துரட்சித்தாலும்           அக்கோண மீதிருந்து கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே. (7)

பச்சை முகில் மேனியனே உனக்கு இந்த பார்தனிலே பத்தவதாரமுண்டு       
மச்யமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும் வாம(ன) மென்றும் ராமன் என்றும் பவித்யமென்றும் துஷ்டரையடக்க மோகினி வேடங் கொண்டு தோன்றினாயுன் சொரூபமெல்லாம் அறிவாருண்டோ அச்சந்தீர்த்தெனையாளக் கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே.(8)

வேதியனாய்த் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்கரூபமானாய் சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருப்பாய் தரணி வாழ்க                  சோதனைகள் பார்த்திடுவோர் துடிப்போர் தம்மை துஷ்டரையும் வதைசெய்து லோகமாள்வாய் ஆதிமுதலோரெழுத்தே நீ கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (9)

மாயவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா                              காயம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா           நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா                 ஆயர் குலத்துதித்தவனே கருடன் மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே. (10)

முப்புரத்தை யெரித்தவனே இப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகந்நாதா முன்னே வாவா
எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைபங்கிலிருப்பவனே இறங்கி வாவா                            ஒப்பிலா மணி விளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா   
அப்பனே ரகுராமா கருடன் மீதில் அன்புடன் ஏறி வந்தருள் செய்வாயே. (11)

துளசிமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா                      களப கஸ்தூரியனே கடாட்சந்தாதா கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா                          பரம் பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பக்தி முக்தி சித்தி செய்யவுன் பாதந் தாதா         அளவிலா மெய்ப்பொருளே கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்தருள் செய்வாயே.(12)



சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது அன்று “அகல்கில்லேன் இறையும் என்றும் அலர்மேல் மங்கை உறை மார்பனாம் திருவேங்கடவனின் திருப்பாதம் சரண் அடைந்து”,  விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும், நீண்ட ஆயுளும் இறுதியாக வைகுண்டப் பதவியும்  பெறுவர்.