Friday 17 July 2015

ஆடி மாத பண்டிகைகள்

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 


ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. 

இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். 

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த ஆடி மாதம் வெள்ளிக்கிழமையிலேயே துவங்குகிறது.

ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

 
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாத‌ம் எ‌ன்பது அ‌ம்மனு‌க்கு உக‌ந்தது எ‌ன்றாலு‌ம், கு‌றி‌ப்பாக மா‌ரிய‌ம்ம‌ன் வ‌ழிபாடு இ‌ன்னு‌ம் ‌சிற‌ப்பாகு‌ம். ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌ல் மா‌‌ரிய‌ம்மனு‌க்கு கூ‌ழ் ஊ‌ற்‌றி ‌வீடுக‌ளி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் செ‌ய்வா‌ர்க‌ள். 

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும். 

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள். 

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். 

  
ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று. 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும். 

ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான்.

ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதி களுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை- பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை  மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத்  தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரை யில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக் குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்று கின்றனர். இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.

திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

ஆடி மாதப் பழமொழிகள் பல. "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்.'

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

சேலம் ஏழு பேட்டை களில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ் வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவா கும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத வித மாக செருப்படித் திரு விழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன. 

திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார் கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள் ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமி யும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும். பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறி களால் அலங்காரம் செய்வர். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார் கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும், மற்ற தமிழகப் பகுதிகளில் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

செஞ்சிக் கோட்டையருகேயுள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள். அன்று மாலை அம்மன் புற்றுக் கோவிலிலிருந்து  புறப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தரு ளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை அம்மன் பூங்கரக வடிவில் உலா வருவாள். ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

அருகேயுள்ள பெரிய சடையம்மன் ஆலயத் திலும் சின்ன சடையம்மன் ஆலயத்திலும் பக்தர்கள் வேல் குத்தியும் எலுமிச்சைப் பழங்களை ஊசியில் குத்தியும் பிரார்த்தனை நிறைவேற்றுவர்.

 ஆடிச் செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண் டும். ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஔவை நோன்பு கடைப்பிடிப் பதால் கன்னிப் பெண் களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர் களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில் லாமல் செய்யும் கொழுக் கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாத மாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியள வில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்குமுன் ஆண்கள்- சிறு ஆண் பிள்ளை கள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

பின் பூஜை நடைபெறும். ஔவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப் படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஔவை நோன்பு.

இந்த ஔவை வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது. முப்பந்தல், தாழக்குடியருகே ஆதிச்ச நல்லூர், குறத்திமலை இங்கெல்லாம் ஔவை ஆலயங்கள் உள்ளன. அதியமானி டம் நெல்லிக்கனி பெற்ற ஔவைதான் இவள். பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்வித்தவள்.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

 ஆடி வெள்ளி

அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, 

லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும்  அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது. பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். ஒன்பது சிவாச்சாரி யார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

நவசக்திகள் பராசக்தியின் ஒன்பது சக்தி அம்சங்களாகும். அவை சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என்பவைகளாகும். இதனை தீப்தை, சூட்சுமை, வாமை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை,  வியுக்தை, சர்வதோ முக்தை என்றும் அழைப்பார்கள். 

புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். ஐந்தாம் வெள்ளி யன்று தேர்த் திருவிழா நடைபெறும். இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.

சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் 

ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்து கின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம். அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும். திருவானைக்காவலில் ஆடி வெள்ளி யன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதி யாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.  குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

 ஆடிப் பௌர்ணமி

திருநெல்வேலி காந்திமதி யம்மை ஆடித்தபசு, குரு பூர்ணிமா என்ற குரு பூஜை, ஹயக்ரீவ அவதார தினம் ஆகியவை இந்த நாளில் அமைகின்றன. ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை உமைக்குக் கொடுத்து காட்சி அளித்த கோலம் அர்த்தநாரி உருவம். (திருச்செங்கோட்டு மூலவர்). ஈசன் தன் உடலின் ஒரு பாகத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்து காட்சி தந்த திருக் கோலம் சங்கர நாராயணர் கோலம். (திருநெல்வேலி). ஆடித் தபசு விழா திருநெல் வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கூறினார். அம்மையும் ஊசிமுனையில் நின்று தவமியற்ற, இறைவன் ஆடிப் பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மால் ஒரு பாகனாக காட்சியளித்தார். ஆடி மாதம் இங்கு நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11-ஆம் நாள் திருவிழாதான் ஆடித் தபசு.

ஆடிப் பௌர்ணமியன்று நடக்கும் ஆடித் தபசு விழாவில் காலை 9.00 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனை நடை பெறும். 12.00 மணிக்கு தங்க சப்பரத்தில் அம்பாள் வீதியுலா வந்து தபசு மண்டபத்தில் இறங்குவாள். மாலை 4.00 மணிக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு ரத வீதி காட்சி மண்டபப் பந்தலுக்கு வருகை தருவார்.

பின் தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் காட்சிப் பந்தல் வந்து, பரிவட்ட மாலை மரியாதையுடன் சுவாமியை மூன்று முறை வலம் வருவாள். பின் 6.15 மணிக்குச் சென்று சங்கரநாராயணராகக் காட்சி தருகிறார். பின் அம்பாள், சுவாமி கோவில் சேர்வார்கள். இரவு யானை வாகனத்தில் சங்கர லிங்கராக புறப்பட்டு வருவார். பின் அம்பாள் திருக்கண் மாலை மாற்றிக் கொண்டபின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

இந்த ஆடிப் பௌர்ணமி அன்றுதான் திருச்சி அருகேயுள்ள உறையூர் பஞ்சவர்ணேஸ் வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங் களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.

காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர்.

இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து குதிரை முகத் துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட, திருமால் குதிரை முகம் கொண்டு அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லை. அதனால் திருமகள் மடியில் அமர, அவர் உக்ரம் தணிந்து லட்சுமி ஹயக்ரீவரானார்.

இவரின் திருவுருவை புதுவை முத்தியால் பேட்டை ஆலயத்திலும் கடலூர் அருகே திருவஹீந்திரபுரத்திலும் காணலாம். படிக்கும் மாணவர்கள் புத்தகம், பேனா வைத்து வணங்குகின்றனர்.

ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது!


DAILY HOLY SLOKAS 17.07.2015 TO 31.07.2015