Saturday, 16 November 2013

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்

 

கார்த்திகை விழா குறித்து புராணங்கள் பல்வித காரணங்களைச் சொன்னாலும் மூன்று காரணங்கள் முக்கியமாக போற்றப் பெறுகின்றன.

01. மலையாய் அமர்ந்த மகாதேவன். அடி - முடிகாண முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும்.

02. தீப்பொறியாய் உதித்த சரவணன். ஈசனின் ஆறுமுகங்களிலிருந்து தீப்பொறியாய் உதித்த சண்முகக்கடவுளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள்.

அவர்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கும் என்பது முருகப்பெருமான் தந்தருளிய வரம்.

அதன்படி இந்நாள் கார்த்திகேயக் கடவுளுக்குரிய நாளாகவும் போற்றப்பெறுகிறது.

03. தீபமாக நின்ற திருமால் ஒருமுறை கலைவாணிக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்று நடத்தினான்.

இதனால் சினந்த சரஸ்வதி யாகத்தை அழிக்க மாய நலன் என்ற அசுரனை ஏவினாள்.

அவன் யாகத்தை தடுக்கும் பொருட்டு உலகம் முழுமையும் இருட்டாக்கினான். உடன் பிரம்மன் திருமாலை வேண்டி நிற்க, பகவான் ஜோதியாய் ஒளிர்ந்து இருளை விரட்டி யாகத்தை காத்தருளினார். இப்படி ஜோதியாய் தோன்றிய விஷ்ணுவை தீப உருவில் வணங்குவர் வைணவர்கள்.

திருக்கார்த்திகையன்று குறிப்பிட்ட நியதிகளோடு, தீபங்கள் ஏற்றி கார்த்திகை தெய்வங்களை வழிபடுவதால் நம் வாழ்விலும் துன்ப இருளகன்று இன்பவொளி பிறக்கும்.



திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 
10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முதல் நாள கொடியேற்றத்துடன் விழா தொடங்கும்.   இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும்   பஞ்ச மூர்த்திகளான கணபதி, முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு  
வாகனத்தில்   பஞ்சமூர்த்திகள் எடுத்துச்செல்லப்படுகிறார்கள். 

பத்தாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவின் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இத்தீபம் அருணாச்சலேஸ்வரரின் உருவத்தை குறிப்பதால் உலகம் எங்கும் உள்ள பக்தர்கள் இக்காட்சியை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

கீடாஹா: பதங்காஹா: மசகாச்ச: வ்ருக்ஷாஹா :
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவாஹா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ராஹா:!!

‘புழுக்களோ பக்ஷிகளோ அல்லது ஒரு கொசுவஹத்தான் இருக்கட்டும். அந்தக் கொசுவோ நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும் பூமியிலும் எத்தனை தினுசான ஜீவா ராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ,

மனுஷ்யர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராமணனோ பஞ்சமனோ எவனானாலும் சரி எதுவானாலும் சரி இந்த தீபத்தை பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவ்ருதியாகி இன்னொரு ஜன்ம எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’ என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்

திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு

திருநாவுக்கரசர் திருவண்ணாமலையில் பாடிய பதிகம்.

நான்காம் திருமுறை. பதிகம் 63. திருவண்ணாமலை : திருநேரிசை

திருச்சிற்றம்பலம்:

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்தோட் சுடர்மழுப் படையி னானே
தியே அமரர் கோவே அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவிலேனே. 1

பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே அணியணா மலையு ளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.2

உருவமு முயிரு மாகி ஓதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொலியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே. 3

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே. 4

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே. 5

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த வண்ணா மலையுளா யலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே. 6

இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி யணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே. 7

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி லேனே. 8

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
லுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. 9

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. 10


திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு, அருணகிரிநாத சுவாமிகள்
திருவண்ணாமலையில் பாடிய திருப்புகழ்.

கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.


தீப தரிசனத் தத்துவமாக ஒரு பாடலை சிறீ அருணாசல ஸ்துதிபஞ்சகம் எனும்
நூலில் காணநேர்ந்தது. அப்பாடல்,

இத்தனுவே நான் ம் எனும் மதியை நீத்து அப்
புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்
அத்துவிதமாம் மெய் அகச்சுடர் காண்கை பூ
மத்தி எனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே.


 


அருணாச்சலேஸ்வரர் கோயில் :

 

 

அண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த உலக புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். தென் இந்தியாவை ஆண்ட பல மன்னர்களில் குறிப்பாக பாண்டிய மன்னர், சோழ மன்னர், மற்றும் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் இக்கோயிலின் வளர்ச்சிக்காக பல வழிகளில் உதவிபுரிந்துள்ளனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்கள் சிவன் மற்றும் பார்வதிதேவி. இங்கு சிவன் உலகை உருவாக்கிய பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் உலகளவில் மிகப்பெரிய கோயிலென பெயர்பெற்றது. இக்கோயிலை பற்றி பல விபரங்கள் தமிழ் புராண புத்தகங்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலின் மகிமையை போற்றி தமிழ் கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ளனர்.திருவண்ணாமலை மேலும் ஒரு சிறந்த பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

அக்காலகட்டத்தில் ஆண்ட பல மன்னர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சிக்கும் வசதியடையவும் மிகுந்த பொருளுதவி, பராமரிப்பு ஆகியவை அளித்து இக்கோயில் பிரபலமடைய செய்துள்ளனர். பல பக்தர்களும் பொதுமக்களும் திருவண்ணாமலை வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்துள்ளனர். இக்காரணத்தால் கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக இக்கோயிலின் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது

 இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் உள்ளன. பதினைந்தாம்  நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாக விளங்குகிறது. கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்  நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் உள்ளது. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவாகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் உள்ளது. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது.குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசாலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.

இங்கு அக்னி வடிவத்தில் உள்ள சிவன் வழிபாடு ஓவ்வொரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது பல்லாண்டு காலமாக நடந்து வரும் பழக்கமாகும். இந்நாள் மிக விசேஷமான நாளாககார்த்திகை தீபத்திருநாள்என்று அழைக்கப்படுகிறது. இதை காண உலகமெங்கும் உள்ள சிவனடியார் பக்தர்கள் இங்கு கூடி தீபத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியமான காரியம் என்பது மக்களிடையே நிலவும் ஆழ்ந்த நம்பிக்கை.இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன் அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதிதேவி அபிட்டகுசலாம்பாள் என்ற பெயர் பெற்றும் விளங்குகின்றனர். இக்கோயில் சிவனுடைய சிறப்பான கோயில் என விளங்குவதற்கு காரணம் இங்கு சிவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் காட்சி தருவதால் சிறப்புபெற்றது. மற்ற நான்கு பூதங்களான ஆகாயம், நீர், வாயு, மற்றும் நிலம் சேர்ந்து அமைந்தது தான் இவ்வுலகம். இந்த நான்கு பூதங்களும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வெவேறு கோயில்களில் சிவனை பிரதிபலிகின்றன. சிவன் திருவானைகாவலில் நீர் வடிவத்திலும் சிதம்பரத்தில் ஆகாய வடிவத்திலும் காஞ்சிபுரத்தில் நிலம் வடிவத்திலும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலில் வாயு வடிவத்திலும் காட்சியளிக்கிறார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்றும் பாரம்பரிய முறையில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைமுறையில் இருந்துவருகிறது. இங்கு வாழும் மக்கள் மற்றும் கோயிலுக்கு சம்மந்தமான பூசாரி நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள், சிப்பந்திகள், காவலாளிகள், பஜனை குழுவினர், பல்லக்கு தூக்குபவர்கள், வித்வான்கள், மற்றும் இதர கைவினை கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அணைத்து கோயில் வேளைகளில் ஈடுபட்டு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து சரிவர செய்து வருகின்றனர்.குறிப்பாக தெற்குப்புரத்தில் உள்ள தெப்பகுளத்தில் இருக்கும் கங்கா தீர்த்தத்தை யானையின் மீது வைத்து தெற்கு புரத்தில் திருமஞ்சன கோபுரம்வழியில் கொண்டுவந்து இந்நீரை இரண்டாவது பிரகார நுழைவாயிலை சுத்தம் செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது.பின்பு சிவன் மற்றும் பர்வதிதேவியை ஊர்வலமாக சிவனை ராஜகோபுரம் உள்ள கோயிலுக்கும் பார்வதியை உண்ணாமலையம்மன் கோயிலுக்கும் எடுத்துச்செல்கிறார்கள். அதன் பின் பூஜைகள் ஆரம்பித்து காலையில் தொடங்கி ஒரு நாள் முழுவதும் ஆறு முறை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் சிவனை சேவித்து பௌர்ணமி அன்று மாதம் ஒரு முறை கிரிவலம் வருகின்றனர். சுமார் 5 லட்சம் பக்தர்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமி நாள் அன்று 13 கி.மீ நடந்து கிரியை சுற்றி வருவது வாழக்கமாக உள்ளது. இக்கிரிவலம் செல்பவர்கள் அனைவரும் மனதில் அமைதியுடனும், உடல் வலிமையுடனும் இருக்க உதவுகிறது

 

திருவண்ணாமலை வரலாறு :

திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றி பாடியுள்ளனர். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில் உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்கு கிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின்
புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது. அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள், கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.

மேலும்
விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார்
இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம். ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது

 

கிரிவலம் :

திருவண்ணாமலையில்  ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Wednesday, 13 November 2013

பிருந்தாவன துவாதசி 14.11.2013

பிருந்தாவன துவாதசி  14.11.2013

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
துளசிச்செடியின் பெருமைகள் நிறைய. மிக மகிமை வாய்ந்த துளசி, தோன்றிய புராணக்கதையை இப்போது பார்க்கலாம்.
புராணக்கதை.
இது விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலிய பல நூல்களில் விரிவாக அமைந்துள்ளது.
தர்மத்துவஜன் என்னும் அரசன், மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, கார்த்திகை மாதம், பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு 'துளசி' என்று பெயரிட்டனர்.
துளசி, பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள்.  ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள்(அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்). பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.
பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார். அவளிடம், இறைவனிடம் நீங்காத பக்தி, தாசத் தன்மை அல்லது மோக்ஷம் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்டார்.
ஆனால், துளசியோ அவரை வணங்கி, 'தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நான் சென்ற பிறவியில், கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். ஆகவே, ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.
பிரம்மன், 'துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, சுதர்மன் என்ற கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், 'சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான்.  அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும்,  விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்' என்று வரமருளினார்.
துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், பதினாறு அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள ராதிகா மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை புஷ்கர க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான்.

துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்த்தைக் கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, காந்தர்வ முறையில் அவளை மணந்து கொண்டான்.
துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான்.  அவன் கழுத்தில் அவனைக் காக்கும் மந்திரக் கவசம் மின்னியது.
மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், சங்கரர் ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.
தேவர்கள்   சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார்.  சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார்.
சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார்.
சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.
தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான்.
சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.
சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான்  விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள்.
சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும்  என்று  நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.
விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு, யுத்தத்திற்கு புறப்பட்டான்.
சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.
சிவனார், அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கிறீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.
பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது,  விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான்.
அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.

கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். 
துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.
துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.
தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.
விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார்.  துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ,  கல்லாகப் போவாய்' என சபித்தாள்.
விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.
துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.
என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.
இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து,  கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின. சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
இந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.
துளசி பூஜை செய்யும் முறை:
துளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 
பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.
துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

அவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.

கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.
மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

துளசி தேவியைப் போற்றி, பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!!!

 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday, 1 November 2013

தீப ஒளித் திருநாள் 02.11.2013

தீப ஒளித் திருநாள்  வாழ்த்துக்கள்

வெளிச்சத்தின் அருமை இருட்டில் இருக்கும் போதுதான் தெரியும். இருட்டில் தட்டுத்தடுமாறும் பொழுது எங்கிருந்தாவது ஒளிர்க்காதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும் போது தீப ஒளி தோன்றாதா, அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என்று எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் தவம் செய்து கொண்டிருந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக ஆகவேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் என்பவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பத்திலிருந்தும், இருளிலிருந்தும் விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் துன்பத்தையே பாதையாக கொண்டு பட்டினி, உடலை வருத்திக்கொண்டு தவம், நேர்ச்சைகள் ஆகியவையாகத் தான் உள்ளன. இது மேலும் மனிதனை துன்பப்படுத்தும் அல்லவா? ஏற்கனவே துன்பப்படும் மனிதன் இன்னும் துன்பத்தை அனுபவித்து தான் நல்வாழ்வைக் காண வேண்டுமா? இதுபோன்ற பாதையைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகிறதா? மனம் மகிழ்ச்சியடைய சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் உடலை வருத்திக்கொண்டு மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகியவற்றை அடக்கும் முறையில்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை.

தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது. தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம். யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த பூஜையை சகோதரிகள் சகோதரனுக்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி என்பது சாதாரண பண்டிகை அல்ல. ஏதோ நீராடி புத்தாடை உடுத்தி, பண்டங்களை உண்பது மட்டும் தீபாவளி அல்ல. அப்படி செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

கங்கா ஸ்நானத்தின் தத்துவம்: தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

தீபாவளி குளியல்: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியன்று எண்ணெய்யை மனைவி தேய்த்துவிடுவது மிகவும் சிறப்பு என்று கருதப்படுகிறது. வெந்நீரில் குளிக்க வேண்டும்.

பலகாரம் படைப்பது ஏன்?: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம். நரகத்தில் இருப்பவர்கள் கூட அன்று விடுதலையாகி வீடுகளுக்கு வருவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான் நரக சதுர்த்தி என்று பெயர் ஏற்பட்டது. தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு நான்கு நாழிகைக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நான்கு நாழிகை என்றால் 96 நிமிடம். அதாவது 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், அதிகாலை 4.20க்கு குளித்துவிட வேண்டும்.

பாசத் திருவிழா: வட மாநிலங்களில் தீபாவளியை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என கொண்டாடுகின்றனர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளி அன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாக தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வித்தியாசமான தீபாவளி வழிபாடு: ராஜஸ்தானில் தீபாவளியன்று பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர். தீபாவளியன்று ராமரை வழிபடுவது ராஜபுத்திரர்களின் வழக்கம். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். இமாச்சலபிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர். ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர்.

சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினரும் மட்டும் கொண்டாடுவதில்லை, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

தீபாவளிக்கு குபேர பூஜை: செல்வம் என்பது பணம், வீடு, வாசல், நகை என்பது மட்டுமல்ல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். கோடிக்கணக்கில் கொட்டி வைத்திருக்கும் பணக்காரர்களில் பெரும்பகுதியினர் சாதாரண சர்க்கரை போட்டு டீ குடிக்கக்கூட முடியாதவர்களாக இருக்கின்றனர். செல்வம் குவிந்து கிடந்தாலும் சாப்பிடக்கூட வழியில்லை. இதே நிலைதான் ரோட்டில் திரியும் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. உழைக்க மனம் வராததால் ஒருவன் பிச்சை எடுக்கிறான். இந்த இரண்டும் இல்லாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தத்துவத்தை உணர்த்துவதே குபேர பூஜை. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இவனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன். திருப்பதி தலத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்து பத்மாவதியை திருமணம் செய்யும் வேளையில், எஜமானுக்கு ஒரு கோடியே 14 லட்சம் பொன் கடன் கொடுத்து பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டவன் குபேரன். இந்தக் கடனுக்கு வட்டியாக திருப்பதி கோயிலில் குவியும் உண்டியல் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கிறான். குபேர பூஜையை என்று கொண்டாடுவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. சிலர் தீபாவளிக்கு முதல்நாளும், சிலர் தீபாவளி அன்றும், நடத்துகின்றனர். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் இந்த பூஜையை நடத்துவதே சிறந்தது.  வளர்பிறையில் நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம். தீபாவளி அமாவாசை நாளில்தான் பெரும்பாலும் வருகிறது. எனவே, அதற்கு அடுத்த நாள் குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.

குபேர பூஜையை ஒட்டி தங்க நகைகள் வாங்கலாம். திருமணங்கள் எல்லா மாதங்களிலும் (சூன்ய மாதங்கள் தவிர) நடந்தாலும் ஐப்பசியில் நடத்துவது விசேஷ அம்சம். ஐப்பசியிலிருந்து குளிர்காலம் துவங்குகிறது. இதிலிருந்து கார்த்திகை, மார்கழி, தை வரை கடும் குளிர் இருக்கும். இந்தக் குளிரால் உடலில் நோய்கள் ஏற்படும். ஐப்பசியில் திருமணம் முடிக்கும் தம்பதிகள் மணவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பர். மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவனை எந்த நோயும் அண்டுவதில்லை. இதனால்தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றனர். அது மட்டுமல்ல! ஐப்பசியில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மழலைச் செல்வமும் விரைவிலேயே கிடைத்துவிடும் என்பதும் பொதுவான நம்பிக்கை. பூஜை செய்யும் முறை: கோயில்களில் யாகம் செய்யும்போது ஒரு மந்திரம் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கலாம். ராஜாதி ராஜாய பரஸ்கஞஸாஹினே, நமோ வயம்வை சரவணாய குரம்ஹே ஸமாகா மான்காம காமா யமக்யம் காமேஸ்வரோவை சரவணோததாது - குபேராய வைஸ்வரவணாய மஹாராஜாய நம என்பதே அந்த ஸ்லோகம். யாகம் ஒன்றை நடத்தும்போது குபேரனை அந்த இடத்திற்கு அழைக்கின்றனர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் நடப்பதன் மூலம் ஊரே செழிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம், லட்சுமியுடன் கூடிய குபேரனின் படம் ஆகியவற்றை பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். படத்தின் முன் வாழை இலை போட்டு, சாணப்பிள்ளையாரை வையுங்கள். இலையில் நெல்லை குவியலாக கொட்டுங்கள். வசதி உள்ளவர்கள் தங்க நகைகளை வைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்கள் படையுங்கள்.

பின்னர் திருவிளக்கேற்றி பூஜை செய்யுங்கள். வடக்கு நோக்கி நின்று குபேரனை நினைத்து வழிபடுங்கள். எனக்கு கொடுத்த இந்த வாழ்விற்கு நன்றி. இது என்றும் நிலைத்திருக்க உன் அருள் வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள். வறுமையான நிலையில் இருப்பவர்கள், குபேரனே! எனது குடும்ப வறுமை நீங்கி போதுமான செல்வம் கிடைத்திட அருள் செய் என்று வேண்டுங்கள். பூஜைக்கு பிறகு, ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள். கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். வற்றாத செல்வம் வீட்டில் தங்கும். லட்சுமி கடாட்சமாய் நம் வீடு என்றும் திகழ குபேர பூஜை வழிவகுத்துக் கொடுக்கும். குபேர பூஜையன்று எதுவுமே செய்ய வசதி இல்லாதவர்கள், பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்; கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வைத்திருக்க வேண்டும். வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

தீபாவளியின் காரணனாக நரகாசுரன் சொல்லப்படுவது போல், வேறு சில காரணச் சம்பவங்களும் கூறப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
தீப ஆவளி என்றால், தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றுவது என்று பொருள்.
  • மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள் இது.
  • குப்த அரசன் விக்கிரமதித்த சந்திரகுப்தன் அரியணை ஏறிய திருநாள்.
  • சமண மதத்தினரின் வணக்கத்திற்க்குரிய வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம்- வீடு பேறு அடைந்த புனித தினம்.
  • குரு கோவிந்தசிங், சீக்கியமத அமைப்பான “கல்சா”வைத் தோற்றுவித்த தினம்.
  • ஆதிசங்கரர் ஞான பீடங்களை நிறுவியதும் இதே தினத்தில் தான்.
  • சாவித்திரி, யமதர்மனோடு வாதிட்டு தன் கணவனின் உயிரை மீட்ட தினமும் இதுவே தான்.
  • நசிகேதன் யமனுலகு சென்று, வரம் பெற்றுத் திரும்பியதும் அந்த நாளில் தான்.
  • வடநாட்டில் சிலர் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்காக கோவர்த்தன பூஜை செய்யும் திருநாள் இது தான்.
  • மத்தியப் பிரதேசத்தில் வாழும் “ரவுத்தாயார்” என்னும் பழங்குடி மக்கள் தங்களைக் கண்ணனின்ஆயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தீபாவளியை நமது பொங்கல் திருநாள் போல உழவர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். புதிய தானியக் கதிர்களை அறுவடை செய்து, லட்சுமி பூஜை செய்கின்றனர்.
  • மராட்டியர்கள் மாவலிக்கு பூஜை செய்கின்றனர்.
  • வங்காளத்தில் காளி பூஜை நிகழ்கிறது.  தீபாவளியன்று, மூதேவியை விரட்டி, ஸ்ரீ தேவியை வரவேற்கும் வைபவம் நிகழ்த்தப்படுகிறது.
  • சிலர் லட்சுமி பூஜை, குபேர பூஜை செய்கின்றனர்.
  • சில இடங்களில் புதுக்கணக்கு தொடங்கப்படுகின்றது.
  • சிலர் தீபாவளிக்கு இராமயானத்தில் ஆதாரம் தேடுகின்றனர். இராமர், இராவணனை வீழ்த்திவிட்டு, சீதையை மீட்டு, அயோத்திக்கு வந்த தினமே தீபாவளி என்று கூறப்படுகின்றது.
பர்மாவின் ‘தாங்கிஜூ’  விழா, சீனாவின் ‘நஹீம் ஹூபர்’ விழா, தாய்லாந்தின் ‘லாப் கிரதோங்க்’ விழா, ஸ்வீடனனின் ‘லூசியா’ திருநாள், இங்கிலாந்தின் ‘கை பாக்ஸ்’ விழா போன்றவை நமது தீபாவளியோடு ஒப்பிடப் படுகின்றன. இந்த விழாக்களில் ஏராள தீபம் ஏற்றுவது மரபாக இருந்து வருகிறது.

ஒரு சமயம் சனகாதி முனிவர்கள், சனத் குமாரரிடம்,' ஏன் தீபாவளி தினத்தன்று பிற தேவதைகளை விடவும் ஸ்ரீலக்ஷ்மீ தேவிக்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்கின்றோம்?' என்று கேட்க, சனத் குமாரரும், பின்வருமாறு கூறலானார்.
'ரிஷிகளே!! அசுர வேந்தன் மஹாபலி, அனைத்து தேவதைகளையும் தன் பலத்தால் வென்று சிறையில் வைத்திருந்தான். பகவான் ஸ்ரீவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மஹாபலியை வென்று அனைத்து தேவதைகளையும் விடுவித்தார். அவர்கள் அனைவரும் மனநிறைவுடன் பாற்கடலுக்குச் சென்றனர். அங்கு ஸ்ரீலக்ஷ்மீ தேவியைக் கண்டு பணிந்து வணங்கித் துதித்தனர். அவர்கள் அனைவரையும் ஸ்ரீலக்ஷ்மீ தேவி, புதிய ஆடைகள், அணிமணிகள் தந்து வரவேற்றார். அன்றைய தினம் தீபாவளி அமாவாசை. ஆகவே, அன்று ஸ்ரீலக்ஷ்மியைப் பணிந்து வணங்கினால், அவரோடு இருக்கும் அனைத்துத் தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும், லக்ஷ்மீ கடாக்ஷம் பெற வேண்டுவோர் அன்று புது ஆடைகள் அணிந்து, ஸ்ரீலக்ஷ்மிக்கு பூஜை செய்ய வேண்டும்' என்றுரைத்தார்.
அப்போது சனகாதி முனிவர்கள், 'ரிஷியே, ஒரு சமயம், மஹாபலி, ஸ்ரீலக்ஷ்மீ தேவியை, ஒரு வரத்தின் மூலம் வேறெங்கும் செல்லவொட்டாது தன் இருப்பிடத்திலேயே இருக்குமாறு செய்திருந்தானல்லவா.. எப்போது தேவியை அவன் விடுவித்தான்?' என்று கேட்க, சனத் குமாரர் பின்வருமாறு கூறலாயினார். 'முனிவர்களே!!, மஹாபலி, முதலில் தேவர்களிடம் போர் செய்து தோல்வியே அடைந்தான். அதன் காரணமாக, ஒரு கழுதையாக மாறி மறைந்து திரிந்தான். அவனை தேவராஜனான இந்திரன் தேடி அலைந்து வரும் பொழுதில், மஹாபலியைக் கண்டுணர்ந்து அவனைக் கொல்ல முனையும் போது, பிரம்ம தேவர் குறுக்கிட்டு, தடுத்தார். அவர் சொற்படி, தேவேந்திரன் மஹாபலியைக் கொல்லாது விடுத்தார். அச்சமயம், பலியின் உடலில் இருந்து ஒரு தேவி வெளிவந்தாள். அவள் தேவேந்திரன் சமீபம் வர, அவளைப் பார்த்து, பிரமித்த இந்திரன், பலியிடம், 'இந்தப் பெண் யார், இவள் அசுரப் பெண்ணா, தேவலோக மங்கையா?' என்று வினவினார்.
மஹாபலி, 'இந்திரா, சாக்ஷாத் ஸ்ரீலக்ஷ்மீ தேவியே இந்தப் பெண்' என்று பதிலிறுக்க, தேவேந்திரன், மிகப் பணிவுடன், ஸ்ரீலக்ஷ்மீ தேவியை அணுகி, 'அம்மா, தாங்கள் அசுர வேந்தனை விட்டு நீங்கி, தேவர்களுக்கு அருள்புரிய திருவுளம் கொண்டதன் காரணம் நான் அறியலாமா?' என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீலக்ஷ்மீ தேவி, ' நான், உண்மை, தர்மம், தானம், தவம், பராக்ரமம் முதலியவை நிறைந்தவர்களிடத்தும் நன்னடத்தை உடையவர்கள், விடிகாலையில் எழுபவர்கள், பகலில் உறங்காதவர்கள், தேவையுள்ளவர்களுக்கு உதவுபவர்கள், தனித்து உண்ணாதவர்கள், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் முதலில் உணவளிப்பவர்கள், மூத்தோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், அதிகம் கோபப்படாதவர்கள், எளியோரைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடத்திலேயே நிலையாக இருப்பேன். அசுரர்கள் எளியோரைத் துன்புறுத்தியும், தர்மத்திலிருந்து வழுவியும் நடந்தார்கள். அசுரவேந்தனான மஹாபலி, அவர்களைத் தட்டிக் கேட்கவில்லை. ஆகவே, அவர்களை விட்டு விலகி, தேவர்களுக்கு அருள்புரியலானேன்’ என்று அருளினாள்.
இந்திரன் மிக மகிழ்ந்து, தேவியைப் பலவாறு துதித்து, ஸ்வர்க்க லோகத்திற்கு எழுந்தருளுமாறு பிரார்த்தித்தான்’ இவ்வாறு கூறி முடித்தார் சனத்குமாரர்.

தீபாவளியன்று ஸ்ரீலக்ஷ்மியை வழிபடுவதன் உட்பொருள்: சுத்தம் நிரம்பிய இடத்தில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. தீபாவளி தினத்திற்கு முன்னரே, வீட்டைச் சுத்தம் செய்து, அலங்காரம் செய்வது வழக்கம். மேலும் பூஜையின் போது, துடைப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். துடைப்பத்திற்கும் மஞ்சள் குங்குமம் இட்டு வழிபாடு செய்வது வழக்கம். தீபாவளி தினத்தன்று வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றோம். அஞ்ஞான இருளகலும் இடத்தில், மெய்ஞானப் பேரொளியாகிய லக்ஷ்மீ தேவி தோன்றுகின்றாள். நீரை அன்புக்குக் குறியீடாகச் சொல்வது வழக்கம். அன்பு வெள்ளம் என்றே குறிப்பிடுகின்றோம். லக்ஷ்மீ தேவி நீர் மேல் தாமரை மலரில் அமர்ந்தருளுவதாகவே புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆக, அன்பு என்ற நீர் நிரம்பியிருக்கும் உள்ளத்தில் லக்ஷ்மீ தேவியாகிய தெய்வீக சக்தி அருளும். தாமரை மலர் பற்றற்ற தன்மையைக் குறிப்பது. உலகக் கடமைகளை பற்றில்லாது செய்து வர, அன்னையின் அருள் கிடைக்கும். அன்னையின் இரு கரங்களிலும் தாங்கியிருக்கும் தாமரை மலர்களும், அன்னை அணிந்திருக்கு அளவில்லாத ஆபரணங்களும், வாழ்வின் ஒளி பொருந்திய தன்மையையும், வாழ்வை மிக சந்தோஷமாக அணுக வேண்டிய முறையையும் உணர்த்தும் அதே நேரத்தில், வாழ்வை நிலையாக எண்ணாத பற்றற்ற தன்மையையும் உணர்த்துகின்றன. வீடெங்கும் நல்லொளி பரவும் நேரத்தில், நம் மனதிலும் தெய்வீகப் பேரொளி பரவ வேண்டியே ஸ்ரீலக்ஷ்மீயைப் பூஜிக்கின்றோம்.
பூஜிக்கும் முறை:
வட இந்தியாவில், மாலை வேளையிலேயே லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்கின்றார்கள். ஸ்ரீலக்ஷ்மீ பூஜையை, லக்ஷ்மீ குபேர பூஜையாகச் செய்வதும் வழக்கில் இருக்கின்றது. ஸ்ரீலக்ஷ்மியை வரவேற்கும் முகமாக, வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரை, அரிசி மாவினால் தேவியின் திருப்பாதங்களைக் கோலமாக இடுகின்றனர். பூஜை செய்யும் இடத்தில், பூர்ண கலசத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, அகல் விளக்கு ஏற்றி, நறுமண மிக்க மலர்கள், தூப தீபங்கள், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அன்னையை வணங்குகின்றனர். பூஜையில் தாமரை மலர்கள் பிரதான இடம் பெறுகின்றன. பூஜைப் பிரசாதமான இனிப்புகளை விநியோகிப்பது கட்டாயம். பூஜையில் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக, பஞ்சாமிர்தம். தேவிக்கு, பால், தயிர், நெய், வெல்லம், தேன் கலந்த பஞ்சாம்ருதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒரு மாபெரும் தத்துவம் அடங்கி உள்ளது. இறைவனை அடைய, பக்தி மார்க்கமே சிறந்தது. தூய்மையான இறை பக்தி நிலையை அடைய, அமைதியான மனமே முதல் தேவை. பால் மன அமைதியைத் தரும். தயிர். இது பாலை, உறை உற்றி, அசையாமல் சில மணி நேரங்களுக்கு வைத்துப் பின் கிடைப்பது. பால் பொறுமையாக, பல மணி நேரங்கள், தனக்கு நிகழும் வேதிவினைகளைச் சகிப்பதாலேயே தயிர் கிடைக்கிறது. தயிர் நமக்கு உணர்த்துவது, பொறுமை, சகிப்புத்தன்மை என்னும் மிக அரிய பெருங்குணங்கள். நெய் தயிரிலிருந்து, வெண்ணை எடுத்துப் பின் அதை உருக்குவதால் கிடைப்பது. தன்னை வெப்பத்தால் உருக்கினாலும், அதற்காக கோபிக்காமல், வாசனையுள்ள திரவமாக உருமாற்றம் அடைகிறது. அதனாலேயே, தீபங்களுக்கும், ஹோமத்திற்கும் பயன்படுத்துகிறோம். நெய் நமக்கு உணர்த்துவது, மன்னிக்கும் தன்மை என்னும் அரிய குணம். வெல்லம்: இது கரும்பு பல வித உருமாற்றம் அடைவதால் கிடைப்பது. தன்னையே தியாகம் செய்து, மிக இனிமையான பொருளாக உருமாறி நமக்குக் கிடைக்கிறது. தியாகம் என்னும் மிக உயரிய குணம், வெல்லம் நமக்கு உணர்த்துவது.
தேன்: தேனீ, மலர்கள் தோறும் பறந்து சென்று, துளித்துளியாகத் தேனைச் சேகரித்து வைக்கிறது. அந்தத் தேனை நாம் தான் உபயோகிக்கிறோம். தனக்கென வாழாது பிறர் நலம் நாடும், சுயநலமின்மையே, தேன் நமக்கு உணர்த்துவது.
அமைதி, பொறுமை,சகிப்புத்தன்மை, மன்னிக்கும் தன்மை, தியாக மனப்பான்மை, சுயநலமின்மை இவை யாவும் நிறைந்தவனே, முழுமையான மனிதன். இந்நிலை அடைந்தவருக்கே பக்தியும் இறையருளும் எளிதில் வசப்படும் இதுவே மானிடப்பிறவியின் நோக்கம்.
மறைமுகமாக, இவ்வைந்து குணங்களும் நமக்கு அருள வேண்டி, பஞ்சாமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறோம்.
நம்முள் பொங்கும் நேர்மறை சக்திகளைத் தூண்டும் முகமாகவே பூஜை முறைகள், விரதங்கள், விரதக் கதைகள் யாவும் இருப்பது கண்கூடு. இப்போது தென்னிந்தியாவிலும் ஸ்ரீலக்ஷ்மீ பூஜை செய்யும் வழக்கம் பெருகி வருகிறது.
நம்பிக்கையுடன் செய்யும் இறைவழிபாடு, கட்டாயம் நல்லனவற்றை நம்மோடு சேர்க்கும்!!..

அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..


 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪